Saturday 19 April 2014

கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?




மனிதர்களில் சிலருக்கு ஏற்படும் நட் அலர்ஜி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமை குறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், கர்ப்ப காலத்தில் பெண்கள் அனைத்துவகையான கொட்டைகளையும், பருப்புகளையும் சாப்பிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஒவ்வாமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மனிதர்களில் சிலருக்கு இந்தமாதிரியான கொட்டைகளையும் பருப்புகளையும் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.

 சிலருக்கு அது தோலில் தடிப்பு, அரிப்பு போன்ற சிறு சிறு உபாதைகளை ஏற்படுத்தினாலும் சிலருக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய தொண்டை அடைப்பு வரை செல்லக்கூடியதாக இருக்கிறது. ஒரு முறை இந்த ஒவ்வாமை வந்துவிட்டால், இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தொடர் பிரச்சனையாக நீடிக்கிறது. இப்படியான கொட்டைகள், பருப்புகள் ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் இந்தமாதிரியான கொட்டைகளையும், பருப்புகளையும் வாழ்நாள் முழுவதும் சாப்பிடாமல் தவிர்ப்பது மட்டுமே அவர்கள் இந்த ஒவ்வாமை உபாதைகளில் இருந்து விடுபட இருக்கும் ஒரே வழி.
இந்த பின்னணியில் இந்தமாதிரியான ஒவ்வாமை ஒரு சிலருக்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்தும், அதை ஆரம்பகட்டத்திலேயே தடுக்க முடியுமா என்பது குறித்தும் மருத்துவ உலகில் நீண்டநாட்களாகவே தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
சுமார் எட்டாயிரம் குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களிடம் ஆய்வு செய்யப்பட்ட மருத்துவர்களின் முடிவுகள், ஜமா குழந்தைநல மருத்து இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் ஆய்வின் முடிவுகளின்படி, கர்பகாலத்தில் தாய்மார்கள் எல்லாவிதமான கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம், கருவிலேயே அந்த குழந்தைகளுக்கு இந்த பருப்புக்கள் மற்றும் கொட்டைகள் பழகிவிடுவதால், அவர்கள் பிறந்து பெரியவர்களாகும்போது அவர்களுக்கு இந்த பருப்புகள் மற்றும் கொட்டைகளினால் ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரியவந்திருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 
அதேசமயம், இந்த ஆய்வின் முடிவுகள் முடிந்த முடிவல்ல என்று ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். காரணம், இது தொடர்பாக ஐக்கிய ராஜ்ஜியம் உட்பட வேறு நாடுகளில் செய்யப்பட்ட வேறுபல ஆய்வுகள், கர்பகால உணவுக்கும் குழந்தைகளின் எதிர்கால ஒவ்வாமைக்கும் எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லை என்பதை காட்டியிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
 
இப்போதைக்கு இப்படியான மாறுபட்ட ஆய்வின் முடிவுகள் தெரிய வந்திருப்பதால், கர்பகால பெண்கள் கொட்டைகள் மற்றும் பருப்புகள் சாப்பிடுவதாலேயே அவர்களின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இது தொடர்பான ஒவ்வாமை ஏற்படாது என்று உறுதியாக கூறமுடியாது என்றும் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த இருவேறுபட்ட ஆய்வின் முடிவுகளுமே அந்தந்த இனக்குழுக்களுக்கு சரியாக இருந்தாலும், உலகம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய பொதுவானதொரு அளவுகோளை இந்த விஷயத்தில் எட்டுவது கடினம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் கவுசல்யாநாதன்.

அழகாகக் கோபப்படுங்கள்!




பெரும்பாலும் காரணம் இல்லாமல் கோபம் வருவது இல்லை; ஆனால், மிக அரிதாகத்தான் அது நியாயமான காரணத்துக்காக வருகிறது - பெஞ்சமின் ஃபிராங்கிளின் வாரத்தை இது. ஆக, கோபம் என்பது மீண்டும் மீண்டும் ஓர் எதிர்மறை எண்ணமே என்பது தெளிவாகிறது. எண்ணங்கள் இல்லாமல் மனித மனம் கிடையாது. ஆகவே, கோபப்படுங்கள்; ஆனால், அதற்கு ஆட்படாதீர்கள். அதாவது அழகாகக் கோபப்படுங்கள்.

உளவியல் துறையில் கோபத்தை நிர்வகிக்க (Anger management) பயிற்சி அளிப்பதற்காகவே சிறப்பு வல்லுநர்கள் இருக்கிறர்கள். இவர்களிடம் பெரும் நிறுவனத்தின் உரிமையாளர்களும் உயர் அதிகாரிகளும் தங்களது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சக நிறுவத்தினரிடம் கோபப்படாமல் நடந்துகொள்வது எப்படி? அல்லது எந்த விகிதாச்சாரங்களில் கோபப்பட வேண்டும் என்கிற பயிற்சிகளைப் பெறுகிறார்கள்.

கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டாம்; ஆனால், அதை வெளியேற்றும் விதங்களை, விகிதாச்சாரங்களை மாற்றி அமையுங்கள். அப்போதுதான் அக்கோபத்துக்கான பலன் கிடைக்கும். அல்லது குறைந்தபட்சம் அதனால் நேரும் எதிர்மறை விளைவுகள் தவிர்க்கப்படும். அதற்கு சில உபயோகமான யுக்திகளையும் சொல்லித்தருகிறது உளவியல்.

கோபம் ஒற்றை உணர்வு அல்ல. ஒரு கோபம் இன்னொன்றை, இன்னொன்று மற்றொன்றை என அது ஒரு சங்கிலித் தொடர்போல உருவாகிறது. அமைதியான குளத்தில் கல்லெறிவதுபோது ஏற்படும் அலைகள் போன்றது கோபம். ஒருமுறை கல் எறிவதுடன் நிறுத்திக்கொண்டால் அதுவாக அடங்கிவிடும். திரும்பத் திரும்ப கல் எறிந்தால் அடங்கவே அடங்காது. எனவே, கோபப்படும் வகையில் ஒரு நிகழ்வு நடந்த பின்பு திரும்பவும் அதையே நினைக்காதீர்கள். நினைக்க, நினைக்க கோபம் தனக்கான நியாயத்தைக் கற்பித்துக்கொண்டு பல்கிப் பெருகும்.

அப்படியும் அந்நிகழ்வை மறக்க முடியவில்லையா? உடனே கிளம்புங்கள் உல்லாசச் சுற்றுலாவுக்கு. ஆனால், இந்தச் சுற்றுலாவுக்கு பைசா செலவு கிடையாது. பஸ் பிடிக்கவும் தேவையில்லை. இது மன வெளியில் மேற்கொள்ளப்படும் பயணம் (Mental tour). உங்கள் குழந்தையின் முதல் முத்தமோ காதலியின் கன்னங்களோ உங்களின் சந்தோஷத் தருணங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

கோபம் வருகையில் ஒரு செய்முறை. கண்ணாடி முன்பு நின்று கோபப்படுங்கள். உங்கள் முக பாவனைகளைப் பாருங்கள். ஒன்று, பயந்து பதறி விடுவீர்கள். இல்லை, அது பயங்கர காமெடியாக இருக்கும். சிரித்துவிடுவீர்கள். போயே போச்சு கோபம்!

நிகழ்வு நடந்த இடத்தில் இருந்து உடனே கிளம்பிவிடுங்கள். ஆனால், நண்பருடன் அல்ல, தனியாக. ஏனெனில் உடன் வருபவர் உங்களுக்கு வக்காலத்து வாங்கி உங்கள் கோபத்துக்கு எண்ணைய் வார்க்கலாம்.

கோபம் வருகையில் ஜோராக ஒரு நடைபயிற்சி மேற்கொள்ளலாம். தண்டால் எடுப்பது, பளு தூக்குவது போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பிடித்தமான விளையாட்டுகளை விளையாடலாம். இதுபோன்ற சமயங்களில் கோபத்தின் காரணமாக வெளியேறும் மனச்சோர்வுக்கான ஹார்மோன்கள் குறைந்து, மகிழ்ச்சிக்கான எண்டோர்பின்கள் சுரக்கத் தொடங்கும்.

தாமதப்படுத்துங்கள். கோப உணர்வைக் காட்டத் துடிப்பதில் நீங்கள் காட்டும் ஒரு நிமிடத் தாமதம்கூட உங்கள் வாழ்வின் போக்கையே மாற்றக்கூடும். இதை நிருபிக்கப் பெரியதாக அறிவியல் ஆய்வுகள் ஏதும் தேவையில்லை. அடுத்த முறை யார் மீதேனும் உங்களுக்கு கடும் கோபம் ஏற்படுகையில் உடனடியாக அவரை மனதுக்குள் திட்டுங்கள். ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, முடிந்தால் மனவெளிப் பயணம் போய்விட்டு அவரை அழைத்துத் திட்டுங்கள். கோபம் பாதியாகக் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.

எதிராளியின் இடத்தில் நின்று யோசியுங்கள். சமானியர்களும் மகான்களாகும் வாய்ப்பு இது. அடிப்படை மனிதப் பண்பு, மனித நேயம் இது. ஒவ்வொரு முறையும் கோபப்படும்போது எதிராளியின் இடத்தில் நின்று சிந்திக்கும்போது ஒன்று அவரது செய்கையின் நியாயம் புரியும். நீங்களும் அதுபோல் நடந்துகொண்ட சந்தர்ப்பங்கள் நினைவுக்கு வரும். காணாமல் போகும் கோபம். அல்லது எதிராளியின் தவறு பிடிபடும். மன்னிப்பு எதிராளிக்கு மட்டுமல்ல; உங்களுக்கே அது ஓர் அருமருந்து. மன்னியுங்கள்!